Thursday, September 12, 2013

on
Beauty girls
அழகு !! (நிமிடக்கதை)
தரகர் கொண்டு வந்து கொடுத்தப் படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத்தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட்டாரிடம் மேற்கொண்ட செய்திகளைப் பேசுவதுமாக இருந்ததைப் பார்க்கும் பொழுது இந்த இடம் மிகவும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.
என்ன செய்யலாம் ... என்ற யோசனையுடன் தாயைத் தனியாக வெளியில் அழைத்து வந்தான்.
“அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டினார் இல்லையா...? அந்தப் பெண்ணையும் பார்த்து விடலாம்“ என்றான் மாதவன்.
அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித்துச், “சரிப்பா பாத்திடலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறாள். குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த சோடியா தெரியுது. மற்றபடி மீதி எல்லாமே பொருந்தி வருது......“ அவள் பேச்சை இழுக்க, “நான் அந்தப் பெண்ணையும் பார்க்கனும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள்... எனக்கு அவளைக் காட்டுங்கள்“ என்றான் பிடிவாதமாக மாதவன்.
வேறு வழியில்லை. அனைவரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மையில் மேனாகவை விட இந்தப் பெண் மதுமிதா அதிக அழகு. மாதவனுக்குப் பார்த்ததும் இவளைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரும் நல்ல கலகலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசிவிட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்“ என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே பேசி முடியுங்கள்“ என்றான் மாதவன்.
“சரிப்பா... ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது...?“ யோசனையுடன் கேட்டார் அப்பா.
“பிடிக்கலை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை... இல்லையென்றால் பொருத்தம் பத்தலைன்னு ஏதாவது சொல்லிடுங்கள். ஆனால் எனக்கு இந்தப் பெண்தான் வேணும்“ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.
உடனே தரகரை வரவழித்தார் அப்பா. தரகரிடம், “மதுமிதா வீட்டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்ன்னு சொல்லிடுங்கள்“ என்றார்.
அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?“ என்று கேட்டார்.
“அது வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண்டாங்க. தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க.“ என்றார் தரகர் தலையைச் சொறிந்தபடி.
“இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்...“ என்றார் அப்பா.
“அது முடியாதுங்க.“
“ஏன்...?“
“ஏதோ பொருத்தம் பத்தலைன்னு சொன்னாங்க“
இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பா யோசித்தபடி.... “இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு தானே சொல்லி பொண்ணோட படத்தைக் காட்டினீங்...? பிறகென்னவாம்...?“ சற்று காரமாக கேட்டார்.
“அது வந்துங்க....“ திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு மெதுவாக அவர் காதருகில் வந்து “உங்க பிள்ளை... அந்த பொண்ணுக்கேத்த அழகு இல்லையாம். அதனால பொண்ணுக்குப் பிடிக்கலையாம்“ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் தரகர்.
அப்பா பெருமூச்சுடன் அமர்ந்தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மாதவன் நிலைகண்ணாடியைப் பார்த்தான்.
அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அழகு தான்!!

0 comments:

Post a Comment